Monday, May 17, 2010

வயல்

வரம்பு கடந்து வரப்பு மூடும் வயல் வெளிகள்...
காலை பனித்துளிகளை இலை நுனிகளில்
தாங்கி நிற்கும் பசுந்தாள்கள்....

மேல்வயல் தண்ணீரை கீழ்வயலுக்கு பாய்ச்சி
யாருக்காகவோ காத்திருந்து
யார் காலடி ஓசைக்கோ வளைக்குள் புகும் நண்டுகள்...

பசுமை முட்டி நிற்கும் வயல்களில்
அறிவியல் பாட அலை வடிவை உருவாக்கி ஓடும்
இளம் தென்றல் காற்று...

வள்ளியும் மறத்தியும் களை பறிக்க
முத்துச்சாமி உரம் வீச செழித்து
வளரும் எங்கள் வயல்......

கோடை என்றால் உழுந்து, பயறு பறிக்க
பனையோலை பெட்டியோடு அதிகாலையில் 
இழுத்துச் செல்லும் அம்மா........

இவற்றோடு......
பக்கத்து வாழைத்தோப்பு கான்களில்* மிதந்து கிடந்து
கொர் கொரிக்கும் பச்சை தவளைகளை
பிடிக்கப்போய் 
நிக்கர் நனைந்து திரும்பி....
உழுந்தும் பறிக்காமல் புல்லும் பிடுங்காமல்
விளையாட்டாய் கழிந்தன எனது நாட்கள்......

இவற்றை எல்லாம் உங்களுக்கு காட்ட
என்னிடத்தில் இப்போது வயலில்லை.
வெயிலில் வெடித்து சிதறும் ரப்பர் கொட்டைகள்
நிறைந்த ரப்பர் காடுகள் மட்டும்.....

* கான்கள் - வாழைத் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச வெட்டப்படும் ஆழமான வாய்கால்கள்