Saturday, December 19, 2015

இசைஞானியின் நடத்தை



ஞானியின் நடத்தை


சில தினங்களுக்கு முன்பு இசை ஞானி இளையராஜாவிடம் ஒரு தொலைக்காட்சி செய்தியாளர் இப்போது பரவலாக பேசப்பட்டு வரும் அனிருத், சிம்புவால் வெளியிடப்பட்டு பிரச்சனைக்குள்ளாகி இருக்கும் பீப் பாடல் பற்றி கருத்துக் கூறுமாறு கேட்டார்.
கோபத்தில் உதடு துடிக்க ஞானி "டேய் உனக்கு அறிவிருக்கா.... என்கிட்ட கேள்வி கேட்க உனக்கு என்ன அருகதையிருக்கு, என்ன தகுதியிருக்கு எனக் கேள்வி மேல் கேள்வி கேட்டு" தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
இதில் அந்தச் செய்தியாளர் செய்த தவறு என்ன? சமூகத்தில் நடக்கும் ஒரு நிகழ்வு குறித்து அதேத் துறையைச் சேர்ந்த ஒருவரிடம் கருத்துக் கேட்டதில் எந்தவித தவறும் நிகழ்ந்து விட்டதாகத் தெரியவில்லை.
ஆனால் இசை ஞானியின் நடவடிக்கையால் வெளிப்பட்டது என்ன.... தான் சமூகத்தில் உயர்ந்தவன். வசதி வாய்ப்புகள், புகழ் என பல உச்சங்களைத் தொட்டவன். என்னைக் கேள்வி கேட்கும் தகுதி யாருக்கும் இல்லை என்ற அகங்காரம். சக மனிதனை மதிக்கத் தெரியாத துர்குணம் எல்லாம் அவரிமிருந்து வெளிப்பட்டது.
ஒரு நிலைக்கு உயர்ந்தபின்பு பொது வெளிக்கு வர எல்லோரிடத்திலும் ஒரு தயக்கம் இருக்கிறது என்பது உண்மை. இதற்கு முக்கிய காரணம் தான் உண்டு தன் வேலை உண்டு என ஒதுங்கி இருப்பவன் நல்லவன் என நமது பொதுப் புத்தியில் ஏற்றப்பட்டிருக்கிறது. பொதுவெளியில் நீ உலாவினால் கெட்டவனாகி விடுவாய் என்ற நம்பிக்கையற்ற நிலை இங்கு உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரு உயர் நிலையை அடைந்தபின்பு கீழ் நிலையைப் பற்றி சிந்திக்காத மனிதன் சக மனிதனின் துன்பத்தை அறிந்து கொள்ள முயலவில்லை என்பதுதான் உண்மை. ஆனால் அப்படிப்பட்ட ஒரு மனிதனை உயர்ந்தவன் என்று இந்த சமூகம் போற்றுவது மிகப்பெரிய நகை முரண்.