Monday, September 19, 2011

நகை

தனது பாம்படத்தையும்
தண்டையையும் மாற்றி
நவீனப் படுத்தப்பட்ட போது
முதலில் மறுத்த பாட்டி
புதிய நகையை
மகிழ்ந் தேற்றாள்…

கழுத்தில் முறுக்கு செயினும்
கையில் தங்க வளையல்களும்
காதில் தொங்கட்டானும்
இருந்தபோதும்
இப்படி மூழியாகவா
கல்யாண வீட்டுக்கு போகவென்ற
அம்மாவின் முணுமுணுப்பு ஒரு
தொடர்கதைத் தான்…

மனதொப்பா திருமணத்தில்
நகைகளை மட்டும் மகிழ்வோடு
ஏற்றுக் கொண்டாள்
தனது தங்கை…

தனது பதினொன்று பவுன்
முறுக்கு செயினை திருடன்
பறித்துப்போன பின்
அளவை மட்டும் குறைத்துக் கொண்டாள்
எனது மனைவி…

பொட்டுக் கம்மலை
விளையாடும் போது தொலைத்த
எனது மகள்
வேப்பங்குச்சியை சொருகுகிறாள்
காது துவாரம் அடையாமலிருக்க.

Wednesday, September 7, 2011

முறிவுகள்


உனக்கும் எனக்கும் சண்டையில்லை
உன்னப்பனுக்கும் என்னப்பனுக்கும் பகையில்லை

எங்காத்தாளும் உன்னாத்தாளும்தான்
ஒன்றாக வெற்றிலை வாங்கி
பங்கிட்டுக் கொண்டார்கள்

உன் வீட்டு பிள்ளைகளுக்கு
என் வீட்டு பிள்ளைகளும்
என் வீட்டு பிள்ளைகளுக்கு
உன் வீட்டு பிள்ளைகளும்தான்
விளையாட்டு தோழர்கள்

இதெல்லாம் ஒரு சமய மாநாட்டில்
எப்படி முறிந்து போனது…

Sunday, September 4, 2011

ரப்பருக்காய்...


நேற்றுவரை நீங்கள் தந்த இளநீரை
தான் நான் சுவைத்தேன்...

எங்கள் வீட்டு சமையலறையில் உங்கள்
தேங்காய்கள் உடைந்ததால்தான்
சமையல்கள் ருசித்தன...

உங்களது சில்லாட்டைகள், மட்டைகள்
எங்கள் வீட்டு அடுப்பில்தான் எரிந்தன...

உங்களது காவோலைகள் எங்கள்
மாட்டு தொழுவத்தின்
கூரையை வேய்ந்தன...

உங்களது இளந்தளிர் ஓலைகள்
எங்கள் ஊர் கோயிலில்
தோரணமாய் தொங்கின...
மாதா கோவிலில்
குருத்தோலை ஊர்வலமாக போனது...

எங்கள் ஊர் மாடனுக்கு சாமியாட
மாடப்பனுக்கு உங்களது பூவை
பிளிர்ந்து தந்தீர்கள்...

இத்தனை இருந்தும்
இன்று உங்கள் மூட்டில்
கோடாலி வைத்து விட்டேன்.
நாளை ரப்பர் தைகள் நட...

என்றாவது ஒருநாள்
சாலையோர இளநீர் கடையில்
வாடிப்போன சுவையற்ற
இளநீரைக் குடிக்கும்போது
உங்களது இளநீரின் சுவை
எனது நினைவை கிளறலாம்...