"நான் பள்ளிக்கூடத்தில் ஹாஸ்டலில் நிற்கிறேன். வீட்டுக்கு வரவில்லை"
"ஏன்?"
"பள்ளிக்கூடத்தில் இருக்க அதிக விரும்பம்"
"அப்பா, அம்மா, அக்கா, பாட்டி, தாத்தா எல்லாரும் வேண்டாமா?"
"வேண்டாம்..."
"இரவில் அப்பா, அம்மாவை தேட மாட்டாயா?"
"மாட்டேன்"
"இரவில் பயப்பட மாட்டாயா?"
"டேனியல் அண்ணன் கையை பிடித்துக் கொள்வேன்."
இது மூன்றாவது படிக்கும் பையனினுக்கும் அவனது அப்பாவுக்கும் நடக்கும் உரையாடல் என்று யாரவது சொன்னால் நம்ப இயலாது தான். ஆனால் அது தான் உண்மை.
எனது காது கேளாத மகனுக்கும் எனக்கும் நடந்த உரையாடல் தான் இது. என்ன பதில் சொல்ல... எப்படி சமாதானப்படுத்த.... தெரியவில்லை. திடீரென மனதுக்குள் ஒரு வெற்றிடம். ஏன்? எப்படி? யாரால்? எதற்கு?...... என அடுக்கடுக்காக கேள்விகள் துளைத்து எடுக்க தலையில் தாங்க முடியாத சுமையை தூக்கி வைத்தது போன்ற உண்ர்வு. அலையாடி மகிழ்வித்துக் கொண்டிருந்த அலை திடீரென மேலெழும்பி விழுங்க வருவது போன்ற உண்ர்வு. அசையாமல் மகனை ஆழ்ந்து பார்த்தேன். கையை பிடித்து பக்கத்தில் இழுத்தேன். ஏதோ ஒப்புக்கு நின்றவன் கையை விலக்கிக் கொண்டு அவனது மொழியில் பேசுகிறான்.
"பள்ளிக்கூடத்தில் ரெஜி, டேனியல் அண்ணன் எல்லாம் இருக்காங்க. நான் அவங்கக்கூட இருப்பேன். சண்டை போட மாட்டேன். நல்ல பிள்ளையாக இருப்பேன்." அலமாரியின் மேலே இருந்த பையைக்காட்டி "அந்த பையில துணி, பிரஸ், பேஸ்ட் எல்லாம் வைத்துக் கொண்டு போகிறேன்." என தெள்ளிய திட்டத்தை கூறுவது போல அடுக்கிக் கொண்டே போகிறான்.
என் கண்ணில் கண்ணீர் பனிக்கிறது. என்ன பதில் சொல்ல.... தத்தளிக்கிறது மனது. "அவங்க வீடுகள் எல்லாம் தூரத்தில இருக்கு. அதனாலத்தான் பள்ளிக்கூடத்தில இருக்காங்க. உன்னை அப்பா தினமும் கொண்டு விடுகிறேனே...." என்றவுடன் சிணுங்க தொடங்கினான். இது அவனது பிடிவாதத்தின் தொடக்கம்.
அருகில் வந்த மனைவியிடம் கூறினேன். அவள் விளையாட்டுக்காக கூறுகிறேன் என நினைத்து "போ போ காவ்யா மட்டும் வீட்டில் இருக்கட்டும். சைக்கிள் மிதிக்கட்டும். உனக்கு கோபம் வரும் போது பள்ளிகூடத்தில் சாரை அடி....." என்றவளிடம் "நான் கோபப்படமாட்டேன். நல்ல பிள்ளையாக இருப்பேன்" என்று என் தோளில் சாய்ந்து அடம் பிடிக்க தொடங்கினான்.
மனைவிக்கும் விளையாட்டல்ல.... உண்மை தான்.... என புரியத் தொடங்கியது. "அவனை திட்டவோ அடிக்கவோ செய்தாயா?" எனக் கேட்ட போது இல்லை என மறுத்தாள்.
அவனுக்கு காது கேட்கவில்லை என தெரிந்தவுடன் எங்கெங்கோ அலைந்து திரிந்து, வைத்தியம் குறித்து விசாரித்து கடைசியில் அடைக்கலமாய் கிடைத்தது தான் நாகர்கோவிலில் அவன் படிக்கும் பள்ளி. பள்ளி துவங்கிய கிறிஸ்டோபர் சார் அதை திறம்பட அர்ப்பணிப்புடன் நடத்தி வருகிறார். காது கேளாத குழந்தைகளை உரிய பயிற்சி கொடுத்து பேச வைக்க வேண்டும் என்பது தான் அவரது கனவு. கேட்க முடியாததால், ஒலிகள் ஓசைகள் மூளையில் பதிய முடியாததால், அவற்றை திரும்ப ஒலிக்க முடியாது என்பது அறிவியல். ஆனால் அதை உரிய பயிற்சியின் மூலம் மாற்றி அந்த குழந்தைகள் அம்மா.... அப்பா... என பெற்றவர்களை அழைக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் ஆனந்தம் தான் சாரின் சம்பளம்.
அந்த அடிப்படையில் ஒரல் முறையில் கற்பிக்கும் பள்ளி இது. பள்ளி்க்கூடத்தில் ஹாஸ்டல் இல்லை. ஆனால் தென்காசி. தூத்துகுடி, மதுரை என தொலைவில் உள்ள சில மாணவர்கள் பள்ளிக்கூடத்தின் ஒரு அறையில் தங்கிக் கொள்கிறார்கள். அது தான் எனது மகன் கூறும் ஹாஸ்டல்.
படிப்பதில் எழுதுவதில் எல்லாம் அவன் நன்றாகவே இருந்தான். அவனது குறும்புத்தனம் தான் எல்லோருக்கும் பெரிய குறையாக தெரிந்தது. அவன் செய்து கொண்டிருக்க ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருக்க வேண்டும். செய்ய ஒன்றும் இல்லை என்றால் அப்பா, அம்மா, அக்கா, பாட்டி, தாத்தா என யாரையாவது ஏதாவது செய்து கொண்டிருப்பான். அவன் வீட்டில் இருந்தால் "எங்காவது ஒழிஞ்சு போயிருல" என்ற தாயரின் ஆற்றாமையோ "லே அடிக்காதல" என்ற அக்காவின் கூக்குரலோ, "ஐயோ கை என்னமா வலிக்குது" என்ற பாட்டியின் இயலாமையோ "அப்படி செய்யாதல" என்ற தாத்தாவின் அதட்டலோ "கவின் சொன்னாக் கேளு" என்ற எனது மிரட்டலோ வீட்டில் கேட்டுக் கொண்டு தான் இருக்கும். அவன் சும்மா இருக்கிறான் என்று எப்போதும் யாருமே சொல்ல முடியாது. அப்படி ஒரு குறும்பு.
அவனுக்காக ஒரு சைக்கிள் வாங்கி கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் கிளம்பி விட்டால் கொஞ்ச நேரம் ஊர் சுத்தி வருவான். நண்பர்களோடு குளிக்கச் சென்றால் கொஞ்ச நேரம் கால்வாயில் குதித்து கொட்டமடிப்பான். பின்னர் நண்பர்களோடு விளையாடுவான். இதற்கிடையில் வீட்டிற்கு வரும் போது வீட்டில் மேற்குறிப்பிட்ட சத்தங்கள் மிக சாதாரணம்.
இதனால் தான் அவனுக்கு வீடு வெறுத்து விட்டதோ. இருக்காது.... என்ன குறும்பு செய்தாலும் அனைத்துக்கும் நடுவே வாஞ்சையோடு முத்தம் தந்துவிட்டு கன்னத்தில் மெல்ல கடித்து செல்லும் குறும்பு அவன் என்னை, எங்களை வெறுக்கிறான் என்பதன் அடையாளம் அல்ல என உறுதியாய் கூறியது மனது.
பின்னர் என்ன காரணம்?
அடம் பிடித்து வாங்கிய விளையாட்டு பொருள் சில நிமிடங்களில் பழதாகி போகும் அவனுக்கு மாற்றம் தேவைப்படுகிறதோ? புதிது புதிதாய் ஏதோ தேடுகிறானோ? ஏதோ ஒன்று...
அவன் கூறினால் தெரியும்...
கூறுவான் என்ற நம்பிக்கை...
கூற திரும்பி வருவான்...
வாய் நிறைய முத்தக் கடியோடு...
No comments:
Post a Comment