Saturday, April 16, 2011

ஐடி வேலை


குறிப்பு:  புதிய பொருளாதாரக் கொள்கையை உலக நாடுகள் பரவலாக பின்பற்றிய காரணத்தால் ஏற்பட்ட உலக பொருளாதர நெருக்கடி காரணமாக ஐடி நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து பெருமளவில் வேலை இழப்பு ஏற்பட்ட கால கட்டத்தில் எழுதப்பட்டது.

First Published : 01 Feb 2009 03:37:00 PM IST தினமணிக்கதிர்

இந்த பாத்ரூமுல மட்டும் இவ்வளவு வேகமா எங்கிருந்துதான் அழுக்கு வந்து ஒட்டிக்குதோ. கழுவி ஒரு வாரத்தில் மீண்டும் முழு அளவில் அழுக்காகி விட்டது. சிறு புழுக்கள் வேற நெளியுது. தண்ணீர் ஊற்றி விட்டா போயிடுது. அடுத்தத் தடவை வரும்போது சாம்பலில் உதிக்கும் பீனிக்ஸ் பறவையாய் மீண்டும் நெளியுது.
இன்றைக்கு எப்படியும் கழுவி விட வேண்டும்... என மனதுக்குள் எண்ணியவாறு வெளியே வந்தபோது எனது மனைவி சுபி என்கிற சுப்பிரியா வேலைக்கு போக தயாராகி இருந்தாள். என்னைப் பார்த்தவுடன் இன்றைக்கும் வேலைக்கு போகல தானே?....  நான் காலை ஆபிஸ் போகும் களோபரம் எதுவும் இல்லாமல் நிதானமாக இருப்பதைக் கண்டு மிகச் சரியாக கணித்துக் கொண்டே கேட்டாள்.
போகவில்லை என்பதாய் தலையை மட்டும் ஆட்டினேன். பதில் எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போனாள். டைனிங் டேபிளில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த தட்டை நிமிர்த்தி நான்கு இட்லிகளால் நிரப்பி சாம்பார் ஊற்றி தட்டை காலி செய்து வயிற்றை நிரப்பினேன்.
தண்ணீருக்கு பதிலாக மூடி வைக்கப்பட்டிருந்த ஆறிப்போன டீயை குடித்துக் கொண்டே டிவியை ஆன் செய்தேன். ஏதோ அறுவை நெடுந்தொடருக்கு விளம்பரம் ஓடிக் கொண்டிருந்தது. அதை நிறுத்திவிட்டு நாற்காலியில் கிடந்த செய்தித்தாளை புரட்டினேன்.
பொருளாதார நெருக்கடி இந்தியாவை திரும்பிக்கூட பார்க்காது என்ற நிதியமைச்சரின் அறிவிப்புக்கு கீழே பங்குசந்தையின் தடாலடி வீழ்ச்சி பற்றி கால் பக்கச் செய்தி. அதனுள்ளே கட்டம் கட்டி நிதி நெருக்கடி காரணமாக தொழில் நிறுவனங்களில் ஆட்குறைப்பு அறிவிப்பு. திறமையற்றோர், இலக்கை எட்டாதோரை வெளியேற்ற ஐடி நிறுவனங்கள் திட்டமிடுவதாக பிரபல நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியதாக ஊகச் செய்தி கூடவே இருந்தது.
திறமையில்லாதவர்களை எந்த நிறுவனம் என்றைக்கு வேலைக்கு சேர்த்தது. காம்பஸ் இன்டர்வியூ நாலு கட்டமா நடத்தி தேர்வு செய்து இரண்டு மூன்று வருடம் அலையவிட்டு மீண்டும் இன்டர்வியூ நடத்திதானே தேர்வு செய்தார்கள். தற்போது திடீரென திறமையற்றோர் ஆனது எப்படி எனத் தெரியவில்லை.
செய்தித்தாளை நாற்காலியில் வீசிவிட்டு ஒரு குட்டி தூக்கம் போடலாமென எண்ணிக் கொண்டே ஒன்னுக்கு போக டாய்லெட்டுக்கு போனால் அங்கேயும் அழுக்கு பிரச்சனை. ஒன்னுக்கு போய்விட்டு தண்ணீர் ஊற்றி பிரஷை எடுத்து தரையை தேய்த்தேன். பிரஷால் தொடுமுன் அழுக்கை மாயமாய் மறைப்பதாக விளம்பரப் படுத்தப்பட்ட கிளீனரை ஊற்றி தேய்த்து கழுவி முடித்தபோது வியர்வையில் மொத்த உடலும் நனைந்திருந்தது. கிளீனருடைய மணம் டாய்லெட் முழுவதும் நிரம்பி இருந்தது. அதே கையோடு பாத்ரூமையும் கழுவி விட்டேன்.
சுபிக்கு இந்த பணி என்றால் அப்படியொரு அலர்ஜி. கல்யாணமானதிலிருந்து ஏதாவது கூறி என்னை கழுவ வைத்து விடுவாள். அப்போது கழுவி முடித்த பின்பு இப்படி பளிச்சென்று கழுவ உங்களால்தான் முடியும் என பாராட்டுவாள். இப்போதெல்லாம் இன்றைக்காவது தோணிச்சே என்பதோடு சரி.
மணி பதினொன்று ஆகி இருந்தது. இன்றைக்கு முடிவெடுக்கும் நாள். முடிவு இதுவாகத்தான் இருக்குமென்று தெளிவாக தெரிந்த பின்பும் தெரிந்து கொள்ள ஆவல். செல்போணை எடுத்து ஆன்ரூவுக்கு போண் செய்தேன். சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது என பதில் வந்தது. டியுட்டில இருப்பான். காண்டாக்ட் பிளீஸ் என ஒரு குறுந்தகலை டைப் செய்து அனுப்பி வைத்தேன்.
பதிலுக்கு காத்திருந்து உறங்கிப் போனேன். திரும்ப போண் கூப்பிட்டபோது விழித்துக் கொண்டேன். மணி ஒன்றாகி இருந்தது. அவன்தான். சாப்பாட்டு இடைவேளையில் கூப்பிட்டிருக்கிறான். எடுத்து ஹலோ சொல்லுமுன் சாரிடா, லிஸ்ட் கன்பார்ம் பண்ணிட்டாங்க… என்றான். தொடர்பை துண்டித்தேன்.
பாத்திரிகையில் செய்தி வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே எங்கள் நிறுவனத்தில் ஆட்குறைப்பு பணிகள் தொடங்கப்பட்டிருந்தது. இருக்கக்கூடிய 1836 பேரில் சரிபாதியையாவது தூக்கினால்தான் தாக்குபிடிக்க முடியும் என்றார்கள். டீமை குறைக்கவா, டீமிலுள்ள ஊழியர்கள் எண்ணிக்கையை குறைப்பதா என்பது முதல் விவாதமாக இருந்தது. டீம் எண்ணிக்கையை அப்படியே வைத்து ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுக்கப்பட்டது.
அமெரிக்காவில் தொடங்கிய பொருளாதார நெருக்கடி எந்தவித சத்தமுமில்லாமல் எங்களது நிறுவனத்தை தொட்டபோது ஐடி பிஈ… நாற்பதாயிரம் சம்பளம்… உள்நாட்டிலே வேலை… என்றபோது எழுந்து நின்ற காலர் தானாக கீழே இறங்குவதாகத் தோன்றியது.
டேய் உனது ஒரு மாதச் சம்பளத்துக்கு நான் ஒரு வருடம் உழைச்சாலும் முடியாது என அப்பா கூறியது ஞாபகத்துக்கு வந்தது. கேம்பஸ் இன்டர்வியூல தேர்வானவுடன் எனக்கு தனி மரியாதை. எல்லோரும் மகிழ்தார்கள். இதெல்லாம் ஒரு மாயைதான். ஐந்தாறு வருடத்துல உங்களை பிழிந்தெடுத்துவிட்டு சக்கையாக துப்பப் போறான் பாரு எனக்கூறிய கம்யூனிஸ்ட் மாமா எங்கள் அனைவருக்கும் அன்று கோமாளியானார்.
(இந்த பகுதி மூலக்கதையில் இருந்ததது. ஆனால் தினமணிக்கதிரில் வெளியாக வில்லை)
டெவலப்மெண்ட்னு சொன்னாலே இந்த கம்யூனிஸ்ட்களுக்கு வேப்பெண்ணை தான். என்றைக்குதான் திருந்த போறியோ. படுக்க கட்டில கொடுத்துட்டு ஆணி வைச்சி குத்துறத முதல்ல நிறுத்துங்க. நாடு முன்னேறட்டும். பேப்பரை பாத்தியா? வளர்ச்சி பத்தை தாண்டும்னு போட்டிருக்கான். சீனாவை தாண்டி போயிடுவோம். பொழைக்கிற வழிய பாருங்க… என சித்தப்பா சொன்னபோது அம்மா தம்பிக்காரனை பரிதாபமாக பார்த்தாள்.
வழக்கமாக புள்ளி விவரங்கள், வரலாற்று நிகழ்வுகள் என ஆணித்தரமாக வாதாடும் மாமா இப்போது வாயடைத்து நின்றார். எனக்கு கிடைத்த வேலை அவரது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டேன். ஏதோ வேலை இருப்பதாகக் கூறி கிளம்பிச் சென்று விட்டார்.
(இந்த பகுதி மூலக்கதையில் இருந்ததது. ஆனால் தினமணிக்கதிரில் வெளியாக வில்லை)
மாமா சொன்னது உண்மைதான் என இப்போது தோன்றியது. ராக்கெட்டுக்கு சாப்ட்வேர் எழுத போறோம்னு நினைச்சு தான் வேலைக்கு சேர்ந்தேன். அங்க போனா பெட்டிக்கடையில் பெப்சி விக்கிற கணக்கு போட, கோழிக் குஞ்சுக்கு சரியான நேரத்துக்கு தண்ணீர் விட, வயலுக்கு தண்ணீர் மோட்டார் போட, வீட்டு வாடையை முகர்ந்து கிளீனிங் அட்வைஸ் கொடுக்கன்னு எதுக்கெதுக்கோ புரோகிராம் எழுதியாச்சு.
இன்றைக்கு அவனெல்லாம் சாப்ட்வேர் வேண்டாமென்கிறான். அதனால நீங்களெல்லாம் வெளியே போங்கன்னு சொல்றான். வெளியேற்ற வேண்டியோர் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணி எங்களது டீம் லீடர் கோகுலிடம் வந்தபோதே என் மனது உன் தலை தப்பாது எனக் கூறியது. அவனை பலமுறை முறைத்தாயிற்று. என்ன பொருத்தமோ எனக்கும் அவனுக்கும்? என் வேலையில் குறை கண்டே அவன் நக்கீரனாகிக் கொண்டிருந்தான். விட்டு வைப்பானா என்ன?
ஒரு வாரத்தில் லிஸ்ட் தயாராகி நோட்டீஸ் போர்டுக்கு வந்தது. சரிபாதி எனக் கூறியவர்கள் 900 பேரை மட்டுமே பட்டியலில் சேர்த்திருந்தனர். 18 பேரை பாவம் என விடுவித்திருந்தார்களோ என்னவோ. அகர வரிசைப்படி தேடி சுந்தரேசன் என்ற எனது பெயரை கண்டுபிடித்தேன். பெயரை கண்டுபிடித்த பலர் இடிந்து போயிருந்தார்கள். சிலரது கண்களில் கண்ணீர் துளிகள் திரண்டு பார்வையை மறைத்தது. ஓவென யாருமே அழவில்லை. இது ஐடி பண்பாடு போல…
பட்டியலின் கீழே ஒரு குறிப்பு இருந்தது. ஆட்சேபனைகளை மூன்று நாட்களுக்குள் ஹெச் ஆர் ஓக்கு தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. எல்லோரும் அவசர அவசரமாக எழுதிக் கொடுத்தனர். தங்கை திருமணம், படித்த கடன், விவசாய நிலத்தை படிப்புக்காக இழந்த வரலாறு என தங்களால் முடிந்த அனைத்தையும் கொட்டி எழுதி தள்ளினர். கம்பியூட்டருக்கு இது எல்லாம் புரியாது எனத் தெரிந்தும் எழுதியிருந்தார்கள். நானும் இன்னும் சிலரும் வெறுமனே கோரிக்கையோடு நிறுத்தியிருந்தோம்.
ஏழு நாட்களுக்குள் முடிவு தெரிவிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் பின் இரண்டு நாட்கள் வேலைக்கு சென்றேன். பிறகு மனது ஒத்துக் கொள்ளவில்லை. ஐந்து நாட்களாக வீட்டில் தூக்கமும் சாப்பாடுமாகக் கழிந்து விட்டிருந்தது.
இனிதான் மனைவியிடம் சொல்ல வேண்டும். வேலை குறைவானதால் தற்காலிக விடுப்புகள் எனத்தான் மனைவியிடம் சொல்லியிருந்தேன். அவள் ஒரு சிறிய நிறுவனத்தில் ரிசப்சனிஸ்ட் கம் கிளர்க். நாலாயிரத்து ஐநூறு தான் சம்பளம். எனது நாற்பதாயிரம் சம்பளத்திற்கு அருகில் வராதுதான். பொழுதும் போகும்... எனது செலவுக்கும் ஆச்சு… என அவள் கெஞ்சியபோது மறுக்கவில்லை.
வங்கி கணக்கை லேப் டாப் மூலம் ஆன்லைனில் சோதித்தபோது சரியாக ஒரு லட்சத்து முப்பத்து ஏழாயிரத்து பதினெட்டு ரூபாய் நாற்பத்தெட்டு காசு என தெரிவித்தது. ஏழு வருட சம்பாத்தியத்தில் படித்த கடன் மீட்டியதுபோக இதுதான் மிச்சமா? என மனதில் கேள்வி எழுந்து அடங்கியது. நண்பன் வற்புறுத்தலில் சில மாதங்களுக்கு முன்னால் பங்கு சந்தையில் முதலீடு செய்த இரண்டு லட்சம் ஞாபகம் வந்தது.
நல்ல தென்னந்தோப்பு… வாங்கி போடுப்பா… நிலம் ஏமாத்தாது… தேவைப்பட்டா வீடு கூட கட்டிக்கலாம்… போக்குவரத்துக்கு வசதியான இடம்… என அப்பா கூறியது எல்லாம் இதே போக்கில் போனால் அடுத்த வருடம் டவுணில் நல்ல ஒரு பிளாட் வாங்கலாம்… என்ற நண்பனின் பேச்சு வென்றது.
அவனை தொடர்பு கொண்டு எவ்வளவு மிஞ்சும் எனக் கேட்டபோது சாரிடா… நம்பிய உன்னையும் ஏமாற்றி விட்டேனே… எனத் தொடங்கும் முன் அவன் நா தழுதழுத்தது. தொடர்பை துண்டித்தேன். இந்த ஏழு வருட ஐடி இன்ஞ்சினியர் வாழ்க்கையில் மிஞ்சியது எனக்கு பிடித்திருக்கிறது என்பதற்காக குறைந்த வருமானத்தோடு கிடைத்த மனைவி மட்டும் தான்.
அதுவும் முழுசா ஒரு வருடம் முடியல. மாதம் ஏழாயிரம் வாடகை வீடு. காலி செய்து சிறிய வீடு பார்க்கலாமா? ஊருக்கு திரும்பச் சென்று விடலாமா? சே வேண்டம். சுபியின் வேலையையும் விட வேண்டி வருமே. மனம் குழம்பி தவித்தது. கம்யூனிஸ்ட் மாமா ஒரு கணம் கண்முன் தோன்றி மறைந்தார்.



No comments:

Post a Comment