Thursday, July 3, 2014

ஒரு நாட்குறிப்பு

ஒரு நாள் எவ்வளவு வேகமாக எவ்வளவு எளிதாக கடந்து செல்கிறது என யோசித்து பார்த்த போது தான் இந்த எழுத்து வடிவம் பெற்றது.
காலை ஐந்தரை மணிக்கு எழுந்து பல்துலக்கி எனக்கான டீயை காய்த்து எடுத்துக் கொண்டு கம்ப்யூட்டர் முன்னால் அந்த குளிர் பொருந்திய காலை பொழுதில் உட்கார்ந்த வலைப்பக்கங்களை புரட்டி பார்த்தேன். இன்றைக்காவது ஆசிரியர் தெரிவு பட்டியல் வெளியிடப்பட்டிருக்கும் என்ற நப்பாசையில். தோல்வியில் முடிய கம்ப்யூட்டரை மூடி விட்டு காலை பத்திரிகை வாங்க வீட்டை விட்டு கிளம்பி சென்றேன்.
பத்திரிகை வாங்கிவிட்டு திருவிதாங்கோட்டிற்கான தீக்கதிர் பத்திரிகைகளையும் எடுத்து விட்டு கிளப்பினேன். குறுக்கே வந்த நாய்க்கு பிரேக் போட்ட போது எதிரே வந்தவரை இடித்து விட்டு ஓடியது நாய். "கலங்காத்தால இது வேறயா. போன காரியம் உருப்பட்டாப்பில தான்" என்று அங்கலாய்த்துக் கொண்டு வீதிக்கு வந்தவர் திரும்ப வீட்டிற்கு போனார்.
நானும் காலையில் வரும் போது பல நாய்கள் குறுக்கே வந்தன. எந்த நாயின் வருகையும் என்னை ஒன்றும் செய்யவில்லையே. அறிவியல் வளருது என்கிறார்கள். ஆனால் எனது அனுபவத்தில் மூட நம்பி்க்கைகள் தான் வளருகிறது. தொலைகாட்சியும் அதிவேக தகவல் பரிமாற்ற தொழில்நுட்பங்களும் வெகுதொலைவில் கடைபிடிக்கப்படும் மூட நம்பிக்கையை கூட தனி மனிதனை சுற்றி மேய விட்டிருக்கிறது.
அதனால் தான் பல இப்படியான மனிதர்களை அது எளிதில் மேய்ந்து விடுகிறது. இப்படியான மனிதன் அன்று செய்யும் அனைத்து தவறுகளுக்கும் அந்த நாயை காரணியாக மாற்றி விடுகிறான். தனது செயலில் ஏற்படும் குறையை கண்டறிந்து களையும் எண்ணமே அவனிடம் எழாது.

No comments:

Post a Comment